திருச்சியில் மனிதம் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா…* முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு..!
திருச்சி, செம்பட்டு பகுதியில் உள்ள மனிதம் டிஜிட்டல் பள்ளியில், மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி ஆகியவை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று (07.06.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனிதம் டிரஸ்டின் இயக்குநர் ரா. தினேஷ்குமார் தலைமை தாங்கினார். விழாவில், முன்னாள் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய சக்தியாகும். மாணவர்களின் கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மனிதம் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து மேற்கொண்டுள்ள இந்தச் சமூகப் பணி மிகவும் பாராட்டுக்குரியது. இன்று வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்புகிறேன். மாணவர்கள் இதனைச் சரியாகப் பயன்படுத்தி நன்றாகப் படித்து சமூக முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும்.” என்று கூறினார். விழாவிற்கு மனிதம் டிரஸ்ட் செயலாளர் ஏ.பிரேம்குமார் முன்னிலை வகித்தார். மேலும், ரோட்டரி சங்க திருச்சிராப்பள்ளி சக்தி நிர்வாகிகள் தலைவர் ஷோஷன் சேரியன், செயலாளர் பத்மசுதா, மனிதம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவச் செல்வங்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.


Comments are closed.