Rock Fort Times
Online News

“மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்..”* கருணாநிதி பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் சபதம்..!

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று( ஜூன் 3) கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!! மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்! என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே! வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்தபோது. உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது. வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல் என்னோடு மட்டுமல்ல. நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது. உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்