சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாளை காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் எண்ணிக்கை அதிகம், ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த சமரசமற்ற நிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம். பள்ளிக்கூடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார, சமூகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இடைநிற்றல் இருக்கக்கூடாது. அதை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சுமார் 2500 கோடி நிதிக்காக பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வீர்களா?, சமரசம் செய்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, கடந்த 2 ஆண்டுகளாக நிதி வரவில்லை. இது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. எந்த மறைமுக அழுத்தத்திற்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை. இருமொழி கொள்கை த.வெ.க.வின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் எந்த இடத்திலும் சமரசமில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஆசிரியர்களின் பிரச்சனைகள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் பிரச்சனைகளை பேசி தீர்க்க முடியும். பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். பள்ளி வாகனங்களை சரிவர பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.