நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன் முறையாக தேர்தல் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சாதனை படைத்தது. ஆளும் கட்சியான திமுக+ 73 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான அதிமுக+ 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது காங்கிரஸ். அந்த கட்சி தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், 113 பேரின் ஆதரவுடன் பொறுப்பு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது தவெக. இதுதொடர்பாக அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையிலான குழுவினர் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை 2 முறை சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என தவெக தலைவர் விஜய்யிடம், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார். இதனையடுத்து, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற தவெக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி இன்று(மே8) தங்களது முடிவை அறிவிக்கவுள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

Comments are closed.