தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் (ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு) தனித்து போட்டியிடுகிறது. திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க.சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் த.வெ.க.தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று(01-05-2026) அந்த தேர்தல் பணிமனை தீ வைத்து எரிக்கப்பட்டு கிடந்தது. அத்துடன் அங்கு வைக்கப்பட்ட விஜய் பதாகைகள் எரிக்கப்பட்டும், கிழிக்கப்பட்டும் இருந்தன.

இதுகுறித்த தகவல் பரவியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கட்சியின் ஒன்றிய செயலாளர் தலைமையில் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக தேர்தல் பணிமனைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.