தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று(13-02-2026) சேலத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்க ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் வழிநெடுக விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டம் நடைபெறும் இடத்திலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர். விஜய் சரியாக 12-40 மணிக்கு பேச தொடங்கினார். மதிய நேரம் என்பதால் வெயில் கொளுத்த தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்த கூட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வரும் அவருக்கு, கூட்டத்தின்போது திடீரென வலிப்பு ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சக தொண்டர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் த.வெ.க.வினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது நினைவு கூறத்தக்கது.

Comments are closed.