திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மூடப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் நேற்று ( 11.05.2023 ) மதியம் 2 மணி அளவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி தலைமையில் கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். பிணமாக கிடந்தவரின் பின்னந்தலையில் அடிபட்ட காயம் இருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த சட்டையில் டிரைவிங் லைசன்சு இருந்தது. அதனை எடுத்து பார்த்த போது, அவர் திருச்சி கே.கே.நகர் நேதாஜிநகரை சேர்ந்த ராஜூவின் மகன் ரமேஷ் (வயது 41) என்பதும், அவர் பன்றிகள் வளர்த்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதும், பின்னர் அவர் உறவினர்களுடன் சோ்ந்து மது அருந்தியதும் தெரியவந்தது. அத்துடன் அவர் வந்த மோட்டார் சைக்கிள் ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
அவர் வைத்திருந்த பொருட்கள் அப்படியே இருந்ததாலும், பின்னந்தலையில் அடிபட்டு இருந்ததாலும் மதுபோதையில் சிறுநீர் கழிக்க ஒதுங்கியபோது தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவரை கொலை செய்திருப்பது உறுதியாகி உள்ளது. இவர் மீது சில வழக்குகள் உள்ள நிலையில், முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஐந்து பேரை தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.