தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது,
ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் ரூ.10,000 கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்காக, பிரதமர் மோடி பென்சன் பணம் மாதம் ரூ.500, ஊனமுற்றோர் உதவி தொகை, விதவை உதவி தொகை, வயது முதிர்ந்தோர் உதவி தொகை என அரசின் திட்டங்கள் மூலம் கொடுக்கும் பணத்தை வங்கிகள் பிடித்தம் செய்கிறது. மேற்கண்ட திட்டங்கள் வாயிலாக வரும் பணத்தை பிடிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இருந்தபோதிலும் வங்கி நிர்வாகம் அதைக் கண்டு கொள்வதில்லை. எனவே வங்கிகளின் நடவடிக்கையை கண்டித்தும், மேலாளர்களை கைது செய்ய கோரி வங்கிக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
முன்னதாக விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் வங்கியின் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவலுக்கு நின்ற போலீசார் வங்கி மண்டல மேலாளரை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பின்னர் தடையை மீறி உள்ளே சென்று வங்கி அலுவலகத்தை மூட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.