தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சொந்த ஊர் போறீங்களா..?- சிறப்பு பேருந்துகள் ரெடியா இருக்கு…!
தை பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “30-01-2026 (வெள்ளிக்கிழமை), 31-01-2026 (சனிக்கிழமை) மற்றும் 01-02-2026 (ஞாயிறுக்கிழமை) ஆகிய வார விடுமுறை நாட்கள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30ம் தேதி 360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று, 31-ம் தேதி அன்று 485 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30ம் தேதி 60 பேருந்துகளும், 31-ம் தேதி அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 30-ம் தேதி 20 பேருந்துகளும், 31-ம் தேதி அன்று 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.