தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்- த.வெ.க. தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு சரமாரி கேள்வி…!
சென்னை ஐகோர்ட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். திருச்சியில் நடந்த பிரசாரத்தின் போது போலீஸ் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ரோடு ஷோ போன்றவைகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது இல்லை. ஆனால், எங்களது கட்சிக்கு மட்டும் போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதிக்கின்றனர். எனவே, விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி டி.ஜி.பி.க்கு ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று(18-09-2025) விசாரணைக்கு வந்தது . விசாரணையின் போது, நிபந்தனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் விதிக்கப்படுவதுதானே? தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?. யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்துக்கு உட்பட்டு நடத்த வேண்டும். என ஐகோர்ட்டு தெரிவித்தது.மேலும் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிகளை வகுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Comments are closed.