திருச்சியில் வெவ்வேறு வழக்குகளில் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த வியாழக்கிழமை ( 27.04.2023 ) கைது செய்யப்பட்டனர். திருச்சி பொன்மலைப்பட்டி, ராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் க. சுப்பையா (36). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், ராம்ஜீநகர் போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருந்த நிலையில் அவர் மேலும் குற்றம் புரிந்து வந்ததையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராம்ஜிநகர் போலீசார் பரிந்துரைத்தனர். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், சுப்பையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். அதேபோல திருச்சி பாலக்கரை, சங்கிலியாண்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பா.இளையராஜா (41). இவரை வழிப்பறி வழக்கில் பாலக்கரை போலீசார் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்திருந்தனர். அவர் மீது திருச்சி மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் மேலும் சில வழக்குகள் பதிவாகி நிலுவையிலிருந்தன. மேலும் தொடர்ந்து குற்றம்புரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தனர். அதன்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் எம். சத்தியப்பிரியா ஐபிஎஸ், இளையராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.