Rock Fort Times
Online News

திருச்சி 65 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்கும் பணி தனியார் மயம்:

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இன்று தீர்மானம்!

திருச்சி மாநகரில் 65 வார்டுகளிலும் குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உருவாகும் திடக்கழிவுகளை இல்லம் தோறும் சென்று சேகரிக்கும் பணி தனியார் மயமாக்கப்படுவதாக திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் மருத்துவர் இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , த. துர்காதேவி, பு.ஜெய நிர்மலா விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கழிப்பிட வசதி, கட்டிட வசதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், வார்டு பணிகள், தெருவிளக்கு பணிகள் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 53 -வது தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மாநகராட்சியின் 65 வார்டு பகுதிகளிலும் உள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உருவாகும் திடக்கழிவுகளை இல்லம் தோறும் சென்று சேகரிக்கும் பணியினை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணியாளர்களையும், தேவைப்படும் வாகனங்களில் மாநகராட்சி ஒதுக்கீடு செய்யும் வாகனங்களை அதற்கு நிர்ணயம் செய்துள்ள வாடகை செலுத்தியும், தேவைப்படும் கூடுதல் வாகனங்களை நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்து மேற்கொள்ளும் பணிக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரின் செயல்முறை உத்தரவுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டதன் அடிப்படையில் ஒப்பந்தபுள்ளி கூர்ந்தாய்வு குழு பரிசீலனை செய்து தனியார் நிறுவனத்திற்கு பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் செலவினத்தை 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூபாய் 40 கோடியிலிருந்தும், மற்றும் 15-ஆவது மத்திய நிதி குழு 2022- 23 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தலைப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ரூபாய் 22 கோடியில் இருந்தும் மேற்கொள்ள அனுமதி அளிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகள் வர்த்தக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்கும் பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது என அந்த தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்