தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையில் வசூல் விவகாரம் !
திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு பர்சனலாக பேசியதை மாநில நிர்வாகி இராமநாதன் பொதுவெளியில் வெளியிட்டாரா ?
ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர் தினம், நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஊர்களிலும் ஆங்காங்கே உள்ள சிறு சிறு வியாபார சங்கங்கள்கூட, இதனை விழாவாகவே கொண்டாடிமகிழ்வர். தமிழகத்தை பொறுத்தவரை ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் த.வெள்ளையன் ஆகியோர் தலைமையில் இயங்கும் இருபெரும் வர்த்தகர் அமைப்புகளுமே மே5ம் தேதி விழாவை மிகப்பெரிய மாநாடாகவே நடத்துவார்கள். அசத்துவார்கள்.
அந்தவகையில் இந்த 2023ம் ஆண்டிற்கான விழா, த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், செங்கல்பட்டு அச்சரப்பாக்கத்தில் நடைபெறஉள்ளது.
இதனையொட்டி மாநாட்டு செலவுக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் பண வசூல் செய்யும் பொறுப்பு, அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
இதில் என்ன குளறுபடி நடந்ததோ தெரியவில்லை.
த.வெள்ளையன் நடத்தும் அமைப்பில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள, செயல்தலைவரான சிவசக்தி இராமநாதனின் வாட்ஸ் ஆஃப் நம்பருக்கு, திருச்சி மாவட்ட தலைவரான எஸ்.பி.பாபு என்பவர் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மெசேஜ் தற்போது லீக்காகி வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையில் செயல்படும், பெயர் சொல்ல விரும்பாத ஒருவரிடம் பேசினோம்.,
“திருச்சி மாவட்ட தலைவர் பாபு போதையில் உளறி பேசி அனுப்பியது மாநில நிர்வாகியான இராமநாதனின் செல்போன் எண்ணுக்கு. இது எப்படி தற்போது வைரலாக பரவுகிறது ?
அப்படியென்றால் சிவசக்தி இராமநாதனே இதனை வெளியிட்டாரா ? இதுதான் சக நிர்வாகிகளை நடத்தும் லட்சனமா ? நிர்வாகிகளையே அனுசரித்து போக தெரியாத, இவர்களா தனி ஒரு வியாபாரியை, நல்ல முறையில் வழிநடத்த போகிறார்கள் ?
மாவட்ட தலைவருக்கு செயல்பட தெரியவில்லை. அவர் தன்னை தானே, பதவியைவிட்டு எடுத்துவிடுங்கள் என ஆடியோவில் பல முறை சொல்லிவிட்டார். இதனை கேட்ட செயல்தலைவர் ஆடியோவை லீக் செய்கிறார். ஊரே சிரிக்கிறது. அசிங்கம் யாருக்கு ? த.வெள்ளையனை தலைவராக ஏற்றுக்கொண்ட எங்களுக்குதான். என்ன சொல்வதென்றே தெரியவில்லை” என தலையில் அடித்துக்கொண்டார்.