மரணத்தில் சந்தேகம் என புகார்: குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது வழக்கு…! (வீடியோ இணைப்பு)
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த பிரவீன் ராஜுக்கும், திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியை சேர்ந்த ராதிகாவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான ராதிகா, புலிவலத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஜெனட் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 20ம் தேதி காலை ராதிகாவிற்கு சுகபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, மேல் சிகிச்சைக்காக ஜெனட் மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி குழந்தை இறந்து போனது.
பின்னர், அக்குழந்தை காவிரி கரையோரம் உள்ள ஓயாமரி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஜெனட் மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்து போனது. இதற்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியப் போக்கே காரணம் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையரிடம் புகார் அளித்ததின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் ஜெனட் மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதன் காரணமாக கிழக்கு தாசில்தார் சக்திவேல் முருகன் தலைமையில் இரண்டு அரசு மருத்துவர்கள், ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் போலீசார் ஓயாமரி சுடுகாட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து குழந்தையின் தாய் ராதிகா கண்ணீர் மல்க கூறுகையில், சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தாலும் 24 மணி நேரமும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆனால், மருத்துவர்கள் கண்காணிக்காமல் அலட்சியமாக இருந்ததால் தான் எனது குழந்தை இறந்து விட்டது. இதற்கு முழு காரணம் ஜெனட் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களே காரணம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
Comments are closed.