தமிழகத்தில் நிறைய கோவில்களை காணவில்லை- அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்ட முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்…!
திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தில் உள்ள திருச்செந்துறை கோவிலில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டார். பின்னர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பெரும்பாலான கோவில்கள் ஆண்கள் கட்டியதாகத்தான் வரலாறு இருக்கின்றது. ஆனால், ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கோவிலை ஒரு பெண் கட்டியுள்ளார். இந்த வரலாறை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறைக்கு வரலாறும் தெரியவில்லை, தொன்மையும் தெரியவில்லை. இணை ஆணையராக இருப்பவர்களுக்கு சட்டமும் தெரியவில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக மங்கள வாத்தியம் செய்யக்கூடிய நபர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த சம்பிரதாயத்தை நிறுத்தி விட்டார்கள். 1925-ல் இருந்து இருக்கக்கூடிய அறநிலையத்துறை கோவில்களை தெருவில் விட்டுவிட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 295 கோவில்கள் இருக்கின்றன. அதில் 224 கோவில்களில் தினமும் முறையான பராமரிப்பு இல்லை. 90 விழுக்காடு கோவில்களில் இரவு நேரங்களில் விளக்கு எரிவதில்லை. 95 விழுக்காடு கோவில்களில் மங்கள வாத்தியங்களே இல்லை. இந்து சமய அறநிலையத்துறைக்கு திருக்கோவில் மூலமாக ஒரு மாதத்திற்கு மட்டும் 54 கோடியே 75 லட்ச ரூபாய் வருமானமாக வருகிறது. ஆட்சிக்கு வரும் அமைச்சர்கள் கும்பாபிஷேகம் என்ற பெயரில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு பணத்தை கையாடல் செய்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் நிறைய கோயில்கள் காணாமல் போய்விட்டன. நானே 20 கோவில்களை கண்டுபிடித்து உள்ளேன்
என்றார்.
Comments are closed.