Rock Fort Times
Online News

இதய நோய் மருத்துவத்தில் இமாலய சாதனை: உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து 2 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய மா காவேரி மருத்துவமனை…!

பிறந்து சில நாட்களே ஆன 2 குழந்தைகள் தீவிர இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தனர். அக்குழந்தைகளுக்கு தென் தமிழகத்திலேயே முதன்முறையாக நவீன இருதய சிகிச்சையளித்து திருச்சி ” மா காவேரி மருத்துவமனை ” சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று(15-05-2025) நடைபெற்றது. இதில் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், மூத்த இதய நோய் மருத்துவருமான டாக்டர் டி.செங்குட்டுவன் பேசும்போது., பிறந்து சில நாட்களே ஆன 2 பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்து குழந்தைகளுக்கு முழுமையான தீர்வு அளித்துள்ளோம். பிறந்து இரண்டு மணி நேரமே ஆன 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தையின் இதய வால்வு மிக சுருங்கிய நிலையில் இருந்தது. இதனால் அக்குழந்தை தீவிர இருதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தது. அதேபோல பிறந்து 11 நாட்களே ஆன குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு இதய ரத்த ஓட்ட பாதிப்பும் இருந்தது. இவ்விரு குழந்தைகளும் சிகிச்சைக்காக மா காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இக் குழந்தைகளை பரிசோதித்த இதயவியல் மருத்துவ நிபுணர்களான டாக்டர் எஸ்.மணிராம் மற்றும் டாக்டர் எஸ். பி.வினோத்குமார் ஆகியோர், அக்குழந்தைகளின் இதய நோய் பாதிப்புகளை கண்டறிந்தனர். அதன்படி, பிறந்து 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வு சுருங்கி இருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை உருவானது. இதன் தீவிரத்தை உணர்ந்த மருத்துவக்குழு பலூன் வால்வோ பிளாஸ்டி எனப்படும் சிகிச்சை அளிக்க முடிவு செய்தது. அதன்படி, ஒரு சிறிய பலூன் தொடையில் உள்ள ரத்த குழாய் வழியாக செலுத்தப்பட்டு, குழந்தையின் சுருங்கிய இதய வால்வு விரிவாக்கப்பட்டது.

தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு தற்போது குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. பிறந்து 11 நாட்களே ஆன மற்றொரு குழந்தைக்கு, இதய சுவாச பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. செயற்கை சுவாசத்தின் மூலமே அக்குழந்தை உயிர் வாழும் சூழல் ஏற்பட்டது. எனவே அக்குழந்தைக்கு இதயத்தில் இருந்த ரத்த நாள அடைப்பு பிரச்சனையை சரி செய்ய ” பி. டி.ஏ ” எனப்படும் மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். அதன்படி 2 மில்லி மீட்டர் அளவுள்ள ஒரு சிறிய மருத்துவ சாதனத்தை பயன்படுத்தி அக்குழந்தையின் இதய நோய் பாதிப்பை சரி செய்தோம். இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அக்குழந்தை, பிறகு நல்ல முறையில் குண மடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது என்றார். இதுகுறித்து பேசிய குழந்தைகள் இதய நோய் மருத்துவர்கள் மணிராம் கிருஷ்ணா மற்றும் எஸ்.பி வினோத்குமார் ஆகியோர்., வழக்கமாக பிறந்த குழந்தைகள் 2 லிருந்து 3 கிலோ எடையுடன் இருப்பார்கள். ஆனால் இரண்டு கிலோ ஒன்றரை கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு இதய நோய் சம்பந்தமான சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலான விஷயம்.போதுமான நவீன மருத்துவ உபகரணங்கள் நீண்ட அனுபவம் கொண்ட மருத்துவர்களால் மட்டுமே இதுபோன்ற சிகிச்சைகளை திறம்பட செய்ய முடியும். வழக்கமாக பச்சிளம் குழந்தைகளுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்பட்டால் திருச்சியில் இருந்து கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு உயர் சிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். இடைப்பட்ட இந்த நேரத்தில் குழந்தைகளின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும். ஆனால் திருச்சி மா காவேரி மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் இருப்பதால் இங்கேயே சிகிச்சை அளித்துள்ளோம் என்றார். அப்போது திருச்சி காவேரி மருத்துவமனையின் பொது மேலாளரான ஏ. மாதவன்,மருத்துவர்கள் கே.செந்தில்குமார், ஜி.பிரவீன்குமார், டி.செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்