Rock Fort Times
Online News

திருச்சியில் சிதிலமடைந்த கோவிலில் உள்ள சுவாமி சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம்…( வீடியோ இணைப்பு)

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வடபத்ர காளியம்மன் கோவில் உள்ளது. தனியார் பராமரிப்பில் இருக்கும் இக்கோவில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறநிலைத்துறையினர் கோவிலை புனரமைக்க திட்டமிட்டனர். இந்நிலையில் கோவிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பழங்கால ஐம்பொன் சிலைகள், குத்து விளக்குகள், பூஜை பொருட்களை இந்த கோவிலில் இருந்து எடுத்து திருவானைக்காவல் கோவிலில் வைக்க முடிவு செய்தனர். இதற்காக இந்து சமய அறநிலையத்துறைதிருச்சி உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று( மே 7) வந்தனர். இதுதொடர்பாக கோவிலை நிர்வகிக்கும் தனி நபர் மற்றும் பக்தர்களுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது சிலைகளை அப்புறப்படுத்த விடமாட்டோம் எனக்கூறி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவை காட்டினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் அங்கிருந்து திருவானைக்காவல் கோவிலுக்கு ஒரு வேனில் எடுத்துச்சென்றனர். மேலும், கோவில் சிதலமடைந்து இருப்பதால் பாதுகாப்பு கருதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை பூட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்