கோடை விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களின் வருகையை அதிகரிக்கவும் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் சித்திரை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தப்படுகிறது. புதுவை கடற்கரை சாலை காந்தி திடல், பாண்டி மெரீனா, அரியாங்குப்பம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, சீகல்ஸ், பாரதி பூங்கா, ஊசுடு படகு குழாம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படுகிறது. சித்திரை கடற்கரை திருவிழாவின் தொடக்கவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவில் முதல் நாளான இன்று புதுவை கடற்கரைகளில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடந்தது. இசையுடன் கூடிய நடனம், இசைக்கச்சேரிகள், பீச் வாலிபால், பேஸ் பெயிண்டிங், ரெயின் நடனம், குழு விளையாட்டுகள், நீர் விளையாட்டுக்கள், நீச்சல் போன்றவை நடைபெற்றது.
