முறையாக கணக்கெடுப்பு நடத்தி சாலையோர வியாபாரிகள் தேர்தலை நடத்த கோரி திருச்சி கலெக்டர் மற்றும் ஆணையரிடம் மனு…!
திருச்சி மாநகர அனைத்து சாலையோர வியாபாரிகளின் கூட்டமைப்பு தலைவர் செல்வி, செயலாளர் அன்சர்தீன், பொருளாளர் ஏ.அஷ்ரப்அலி ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு தனியார் நிறுவனம் மூலமாக நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில் சாலையோர வியாபாரிகள் அல்லாதோர் அதிகப்படியாக உள்ளனர். மேலும், காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் பெயரும், அவர்களிடம் வேலை செய்யும் வேலையாட்கள் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளனர் என்பதை பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தும், பலன் இல்லாத காரணத்தால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் இறந்தவர்கள் பெயர் மற்றும் வியாபாரம் செய்யாத நபர்களின் பெயர்களை நீக்கி முறையாக கணக்கெடுப்பு நடத்தி சாலையோர வியாபாரிகளின் தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால், மீண்டும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உண்மையாக உள்ள வியாபாரிகளின் பெயர்களை சேர்த்து சாலையோர வியாபாரிகளின் தேர்தலை முறையாக நடத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று மாநகராட்சி ஆணையர் சரவணனிடமும் மனு கொடுக்கப்பட்டது.
Comments are closed.