விலங்குகளையும் விட்டு வைக்காத “குருவிகள்”:- திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகள், ஓணான்கள், ஆமைகள் பறிமுதல்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம், அபுதாபி உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து சில முக்கிய புள்ளிகளிடம் ஒப்படைக்கிறார்கள். அவ்வாறு தங்கத்தை கடத்தி வரும் நபர்கள் “குருவி” என்று அழைக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது ஒருபுறம் இருக்க மறுபுறம் அரிய வகை விலங்கினங்களையும் குருவிகள் கடத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்று( மார்ச் 20) பாங்காங்கிலிருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் விமானத்தில் திருச்சி வந்தடைந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த உடைமைகளில் அரிய வகை பாம்புகள், ஆமைக் குஞ்சுகள், ஓணான்கள் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அதனை பார்த்ததும் அந்த விலங்கினங்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதனை பயணியிடம் கொடுத்து அனுப்பியது யார்? யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக வாஸ்து என்கிற பெயரில் அரிய வகை உயிரினங்களை வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு திருச்சிக்கு கடத்தி வருவதும், சுங்கத் துறையினர் அவற்றை பறிமுதல் செய்து திருப்பி அனுப்புவதும் தொடர்கிறது. இதில் தேவையில்லாமல் மாட்டிக் கொள்வது அப்பாவி குருவிகளே என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.