தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அதிக வருவாய் வரும் 1,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி., 2017ல் அறிமுகமானது. அப்போது, கோவில்கள் மதம் தொடர்புடையது என்பதாலும், மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், கடந்தாண்டு ஜிஎஸ்டி. வசூலிப்பில் சில மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக குத்தகைதாரரிடமிருந்து பெறப்பட்ட வாடகை வருமானத்தில் உரிமையாளர், 18 சதவீதம் ஜிஎஸ்டி., செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில், கோவில்களும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பிரசாதம், தரிசனக் கட்டணம், தங்கும் விடுதி போன்றவை வருமானம் வரக்கூடியவை. இதை சேவையாக செய்து வருவதாக கோவில் நிர்வாகம் கூறினாலும், அது சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது ஒரே மாதிரியான கட்டணம், விலை என்பதால், ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சில முக்கிய கோவில்களுக்கு பல கோடி மதிப்புள்ள நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. பல ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றால் கோவில் நிர்வாகங்கள் வருவாய் ஈட்டுவதால், அதற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017 முதல், இதுவரை எந்த வரியும் செலுத்தாததால், 8 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய வரி, அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோவிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை வரி நிர்ணயித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள அறநிலையத்துறை, ‘பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை அடிப்படையிலும், மதரீதியாகவும் கோவில் செயல்படக்கூடியது. வணிக நோக்கத்துடன் செயல்படவில்லை’ என, ஜிஎஸ்டி. அதிகாரிகளிடம் விளக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.
Comments are closed.