ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தஞ்சை எஸ்பி ராஜாராம் கூடுதலாக சேர்ப்பு…!* சென்னை ஐகோர்ட் உத்தரவு…!
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், தொடங்கி சிபிஐ வரை பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரித்தும் கொலையாளிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் இருந்து மாநில காவல்துறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், 2022-ம் ஆண்டு காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று(03-03-2025) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் கடலூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை அடுத்து ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், தஞ்சை எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
திருச்சி எஸ்.பி ஆக வருண்குமார் பணியாற்றிய போது குற்ற சம்பவங்களை வெகுவாக குறைத்தார். ஏழை, எளிய மக்களிடம் நிலங்களை அபகரித்தவர்களை “ஆபரேஷன் அகழி” என்கிற பெயரில் அவர்களை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்தார். இதனால், திருச்சி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்தன. அவரின் இந்த துணிச்சலான சேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, திருச்சி சரக டிஐஜியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கியது. தற்போது ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் புலனாய்வு குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி ஐ ஜி வருண்குமார் மனைவி வந்திதா பாண்டேவும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் திண்டுக்கல் சரக டிஐஜி யாக பணியாற்றினார். இவரும் அதிரடிக்கு பெயர் பெற்றவர். இவர் தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றலாகி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.