Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: நாளை ஜனவரி 9-ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்கார சேவை…!

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பகல்பத்து விழா 31-ம் தேதி ஆரம்பமானது. விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்தின் கடைசி நாளான ஜனவரி 9ம் தேதி வியாழக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளுகிறார். இதனையொட்டி நாளை காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து நீண்ட முடியுடன் பெண் கோலம் பூண்டு (மோகினி அலங்காரம்), பகல் பத்து மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளுகிறார்.தொடர்ந்து அரையர் சேவையுடன் பொது ஜன சேவையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பகல்பத்து மண்டபத்திலிருந்து புறப்பட்டு ஆரியபடாள் வாசலை அடைந்து திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சென்று சேருகிறார். இதைத்தொடர்ந்து ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார். நம்பெருமாள் மோகினி அலங்கார சேவையையொட்டி மாலை 4.30 மணிக்கு மேல் முத்தங்கி சேவை கிடையாது. வைகுண்ட ஏகாதசி விழா, மோகினி அலங்காரம் மற்றும் பரம்பரை வாசல் நிகழ்ச்சிகளை ராக்போர்ட் டைம்ஸ் யூடியூப் சேனலில் உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பாக கண்டு மகிழலாம்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்