சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 21-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு…!.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் வருண்குமார் ஐபிஎஸ். இவர் பதவி உயர்வு பெற்று தற்போது திருச்சி சரக டிஐஜி யாக உள்ளார். இவர் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் சீமான் மற்றும் அவரது கட்சியினர் தரக்குறைவாக பேசுவதாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். டிஐஜி சார்பில் இரண்டு சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மீண்டும் வழக்கு விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் அவரது வழக்கறிஞர், முரளிகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும், மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண்குமார் குறித்து பேசி உள்ளார். சீமானுக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை. ஐபிஎஸ் என்பது மிகவும் உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது? இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறினார்.
Comments are closed.