Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் காவலாளியை கட்டி போட்டு ஒப்பந்ததாரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை…!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). தொழிலதிபரான இவர், ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.
இவருக்கு திருச்சி கருமண்டபம் அருகே உள்ள பொன் நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் சொந்தமாக வீடு உள்ளது. இந்நிலையில், துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சண்முகம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு ஒரத்தநாடு சென்றிருந்தார். காவலாளி ஒருவர் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று டிசம்பர் 31 இரவு கொள்ளை கும்பல் ஒன்று அங்கு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், கொள்ளை கும்பல் காவலாளியை தாக்கி அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டுவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர், பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இந்நிலையில் இன்று(01-01-2025) காலை வீட்டுக்கு வந்த சண்முகத்தின் மனைவி, காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த தகவலின்
பேரில், செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின்
கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் மூலமும் துப்பு துவக்கப்பட்டது. வீட்டில் இருந்த நகை, பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் பொன் நகர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
**

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்