Rock Fort Times
Online News

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 333 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்- திருச்சி சிட்டி கமிஷனர் காமினி தகவல்…!

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (30-12-2024) மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. 31-ந்தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 9-ந்தேதி மோகினி அலங்காரமும், 10-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. 16-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கைமன்னன்வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி திறந்து வைத்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வைகுண்ட ஏகாதாசி திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் உள்ளூர், வெளியூர் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பகல்பத்து மற்றும் இராப்பத்தின் போது திருச்சி மாநகர போலீசார் 362 பேர் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 123 சிசிடிவி கேமராக்கள், கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 110 சிசிடிவி கேமராக்கள், காவிரி பாலம், அம்மா மண்டபம், ராஜகோபுரம், தேவி தியேட்டர் உள்ளிட்ட பகுதிகள் என மொத்தம் 333 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 123 சிசிடிவி கேமராக்களிலும் குற்றவாளிகளின் புகைப்படங்களை முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. யாரேனும் குற்றவாளிகள் அங்கு நடமாடினால் மேற்கண்ட கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காவல்துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும். பரமபத வாசல் திறப்பு நாளன்று 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார். பேட்டியின்போது மாநகர துணை கமிஷனர் செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர்பட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்