Rock Fort Times
Online News

பிள்ளைகளை பள்ளிக்கு வர வைக்க கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவரின் அழைப்பு!

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன். இவர் கிள்ளை கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். கடந்த ஆண்டு இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பை முடித்து உயர்நிலை, மேல்நிலை, படிப்புக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டும் அது போல நடந்து விடக்கூடாது என்று கருதி முன்கூட்டியே மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை அவர் நடத்தினார்.

அதில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் ‘பெற்றோர்கள் யாரும் பள்ளி குழந்தைகளைத் தங்கள் குலத்தொழிலான பூச்சி எடுக்கும் தொழிலுக்கு அழைத்து செல்லுதல் கூடாது, அனைத்து பிள்ளைகளையும் மேலே படிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பெற்றோர்களோடு சேர்ந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களே மாற்றுச் சான்றிதழுடன் சென்று கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களையும் 9-ம் வகுப்பில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் பல்வேறு   சமூக நலத்திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்