திருச்சி இயேசு கிறிஸ்து துன்பங்களை அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாள் இரவு சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு உண்டார். அப்போது அவர் பிறருக்கு பணி செய்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்தார். அதை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்களின் புனித வாரத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய நாள் வியாழக்கிழமை, பெரிய வியாழன் என்று அழைக்கப்படுகிறது. பெரிய வியாழன் அன்று கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியின்போது, இயேசுவின் சீடர்கள் 12 பேரை உணர்த்தும் வகையில் 12 கிறிஸ்தவர்களின் பாதங்களை அருட்பணியாளர்கள் கழுவி துடைத்து முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருச்சி மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களான மேலப்புதூர் மரியன்னை ஆலயம், உலகமீட்பர் பசிலிக்கா, கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் நேற்று மாலை சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றது. அப்போது, 12 பேரின் பாதங்களை அருட்பணியாளர்கள் கழுவி துடைத்து முத்தமிட்டனர். திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
