வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு ஸ்டெர்லைட்டை மூடிவிட்டதாக கவர்னர் ஆர்.என் ரவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தமிழ்நாடு அமைதியான மாநிலம், இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது .தமிழ் மொழியின் தொன்மை, தமிழரின் கலாச்சாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் வழங்குகிறது. அரசியலமைப்பின்படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமையாகும். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதி வந்துள்ளது. நாட்டில் பல தீவிரவாத செயல்களுக்கு அந்தபணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்றவர்களில் 90 நபர்களை இந்த அமைப்பே அனுப்பிஉள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர். ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல்அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதை நிராகரிப்பதாக பொருள். இவ்வாறு அவர் பேசினார்.
