Rock Fort Times
Online News

லால்குடி அருகே மது அருந்தியபோது தகராறு: நண்பனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது…!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே காலச்சேரி ஊராட்சி ஜீவா நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜித்குமார்(27). கூலித்தொழிலாளியான இவர், தனது நண்பர் சதீஷ் (29) உள்ளிட்ட 3 பேருடன் திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை பகுதியில் தங்கி சாலை ஓரத்தில் சிமெண்ட் கற்கள் (பேவர் பிளாக்) பதிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த தீபாவளி தினத்தன்று அஜித்குமார், சதீஷ் இருவரும் சக தொழிலாளர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சதீஷ், அஜித் குமாரை பாட்டிலால் தாக்கி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(08-12-2024) இரவு அஜித்குமாரும், சதீஷும் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், அஜித்குமாரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில், ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார், லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்