சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ கேட்டகிரி ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவர் வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் மாமூல் கேட்டு பலரை மிரட்டி வருவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று(9-12-2024) காலை 6 மணியளவில் ரவுடி அறிவழகனை பிடிப்பதற்காக துணை ஆணையர் மற்றும் தனிப்படை போலீசார் பெரம்பூர் பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே சென்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரவுடி அறிவழகன், தனிப்படை போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால், போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரவுடி அறிவழகன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் காலில் காயமடைந்த அறிவழகனை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சென்னையில், ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.