தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் உள்ள மேல வழுத்துார் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயில் ,இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலாகும். இன்று இருவரும் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். நயன்தாரா வந்திருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோயில் முன்பு திரண்டனர். பாதுகாப்பிற்காக போலீஸார் நிறுத்தப்பட்டனர். கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்வீட் ரவி என்பவர் இருவரும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். கோயில் பூசாரி, ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார். அப்போது நீண்ட நேரம் கும்பிட்டபடி நயன்தாரா மனமுருகி வேண்டிக்கொண்டார். கோயிலுக்குள் ஏராளமானோர் வர முயன்றதால் கோயில் வெளிக்கதவை பூட்டி விட்டனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி கும்பிடுவதைப் பலரும் வீடியோ எடுத்ததால் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் நயன்தாராவுடன் செல்பி எடுத்து கொண்டனர். குலதெய்வ வழிபாட்டிற்கு பின்னர் அவர்கள் திருச்சிக்கு தேஜஸ் ரயிலை பிடிப்பதற்காக காரில் புறப்பட்டனர்.

