Rock Fort Times
Online News

நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு சார்பில் மனு…!

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு சார்பில்  அதன் தலைவர் எஸ்.கந்தன், செயல் தலைவர் எஸ்.ஆர்.வி.  கண்ணன், பொருளாளர் என்.பி. ஸ்ரீராமகுமார், பொதுச் செயலாளர் எஸ்.வி.அன்பழகன்,கூடுதல் செயலாளர் எம்.துரைசாமி, மாநில இளைஞரணி தலைவர் ராஜ் விமல் ஆகியோர் சார்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் முன்னிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  அதில்,  நாங்கள் பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே காவல் துறையினர் எங்களிடம் அடிக்கடி வந்து உங்களிடத்தில் திருட்டுப் போன நகைகள் உள்ளது என்று கூறி கைது ஆணை இல்லாமலும், போதுமான ஆதாரங்கள் இல்லாமலும் எங்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர். தமிழ்நாடு அடகு கடை தரகர்கள் சட்டம் 2011-ன் கீழ் நாங்கள் அனைத்து வழிமுறைகளையும் சரியாக பின்பற்றி வருகிறோம். போலீசாரின் தவறான  கைது நடவடிக்கையால் நாங்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் எங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், காவல்துறையினரின் இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

எங்களுக்கும், எங்களுடைய கடைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடை உரிமம் புதுப்பித்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என வழிவகுக்கவேண்டும். கடை உரிமம் புதுப்பிக்கப்படும் போது காவல்துறை விசாரணையை நீக்கவேண்டும். கடை உரிமையாளர் இறக்கும் பட்சத்தில் அந்த கடையை அவரால் நியமனம் செய்யப்பட்ட வாரிசுதாரர் தொடர்ந்து நடத்திவர ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படவேண்டும்.காலம் கடந்து மீட்கப்படாமல் இருக்கும் நகைகளை ஏலம் விடுவதற்கு அனுமதிப்பது, காலம் நிர்ணயம் செய்து உடனடியாக ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.முதல் தகவல் அறிக்கை மூலம் குற்ற வழக்கு பதிவு செய்த பின்பே நகைக்கடை உரிமையாளரை விசாரணைக்கு உட்படுத்த வழிவகை செய்ய வேண்டும். எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்