காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக, காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தமிழகத்திற்கும் நீர்வரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த மாதம் கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறப்பால், ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தமிழகத்திற்கு நீர்வரத்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நடபாண்டிலேயே இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பி இருந்தது. இந்நிலையில், தொடர்ந்து காவிரியில் நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழகத்திற்கான நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் தமிழகத்தின் எல்லை பகுதியான பிலிகுண்டலு, ஒகேனக்கலில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. முன்னதாக, தொடர்ந்து சுற்றுலா பகுதியான ஒகேனக்கல் பகுதியில் அருவியில் குளிக்கவும், பரிசல்களில் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர் வரத்து குறைந்ததால் 39 நாட்களுக்குப் பிறகு தற்போது ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.

Comments are closed.