Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்…!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறப்புக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் சொந்த ஊர் சென்றவர்கள் தங்களது பிள்ளைகளுடன் முன்கூட்டியே திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை கருத்தில்கொண்ட தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல, ரயில்வே துறையும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்தவகையில்
திருச்சியில் இருந்து இன்று (26-05-2024) இரவு 11 மணிக்கு மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டு நாளை(திங்கள்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுக சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி–தாம்பரம் இடையே இந்த மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 24ம் தேதி சென்னை எழும்பூர்-திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்