திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று கடிக்கின்றன. நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி 5 இடங்களில் அறுவை சிகிச்சை முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் திருச்சி பொன்நகர் காமராஜர்புரம் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய் ஒன்று அப்பகுதியைச் சேர்ந்த சுதா (37), அவரது மகள் யமுனா(16), மற்றொரு சிறுமி மணிகண்டன் மகள் பிருந்தா(13) ஆகிய 3 பேரை அடுத்தடுத்து கடித்தது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடைகளுக்கு செல்லவே அச்சமாக உள்ளது. நாய்கள் கடித்தால் கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதால் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.