பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பயணித்து உள்ளனர். இந்நிலையில், புனித தலம் ஒன்றிற்கு சென்று விட்டு, உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் உள்ள இடங்களை சுற்றி பார்ப்பதற்காக அவர்கள் சென்று கொண்டு இருந்தனர் அந்த பஸ் நேற்றிரவு அரியானா மாநிலம் குண்டலி-மனேசர்-பால்வால் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில், திடீரென பேருந்தில் தீப்பற்றி கொண்டது. அந்த பஸ்சில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் பயணித்து உள்ளனர். பஸ் தீப்பற்றியதும், அதனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கவனித்து இருக்கிறார். உடனடியாக பஸ்சை முந்தி சென்று ஓட்டுநரிடம் தீப்பிடித்தது பற்றி தெரிவித்துள்ளார். இதன்பின்பு, பஸ் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியது. அப்போது பேருந்துக்குள் இருந்த பயணிகள் அவசர, அவசரமாக வெளியேறினர். இருந்தாலும் 8 பக்தர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பின்னர், தீயணைப்பு படையினர் பஸ்ஸில் எரிந்த டீயை அணைத்தனர். பின்னர் போலீசார் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.