Rock Fort Times
Online News

துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்- தலைவராக வழக்கறிஞர் உத்திராபதி வெற்றி…!

திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது. இதனால், தலைவரை தேர்ந்தெடுக்க வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் உத்திராபதி மற்றும் வழக்கறிஞர் தென்னரசு ஆகிய இருவரும் போட்டியிட்டனர். நீதிமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் 120 வாக்குகள் பதிவானது. இதில், வழக்கறிஞர் உத்திராபதி 81 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட வழக்கறிஞர் தென்னரசு 39 வாக்குகள் பெற்றிருந்தார்.

மேலும், செயலாளராக சுகுமார், பொருளாளராக சிதம்பரஜோதி, துணைத் தலைவராக கவின்குமார், இணை செயலாளராக பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர்களாக பாஹிரதி, நிர்மல் குமார் ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திராபதிக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்