Rock Fort Times
Online News

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக போலீஸ் சம்மன்…!

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் நயினார் நாகேந்திரன்.  இந்நிலையில்  தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் இருந்து  ரூ.3.99 கோடி கைப்பற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு  ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.  இதுதொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனை அடுத்து 2-வது முறையாக இன்று(25-04-2024) அவருக்கு சம்மன் அனுப்பபட்டது.  இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மே 2-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராவுள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்