திருச்சி காட்டூர் எஸ்.எ.எஸ்.நகரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 43). தொழிலதிபரான இவர் இந்தப் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி புத்தூர் பாரதி நகரை சேர்ந்த முருகானந்தம் மற்றும் கே.கே நகர் பகுதியை சேர்ந்த முகமது நிசாருதீன் ஆகியோர் இவருக்கு அறிமுகமானார்கள். இவர்கள் இரண்டு பேரும் முகமது ரபீக்கிடம், குற்றாலத்தில் நட்சத்திர ஹோட்டல் கட்ட உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அந்த நட்சத்திர ஹோட்டல் கட்ட பணம் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை கொடுத்தால் அதோடு சேர்த்து லாப பணத்தையும் தருவதாக முகமது ரபீக்கிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக தெரிகிறது. இதையடுத்து முகமது ரபீக் தன்னிடம் இருந்த ரூபாய் ஆறு கோடியே 10 லட்சத்தை பல கட்டங்களில் முருகானந்தம் மற்றும் முகமது நிசாருதீனிடம் கொடுத்துள்ளார். சிறிது காலம் சென்ற பிறகும் இருவரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்ததால், ஹோட்டல் கட்டுவதற்கு கொடுத்த பணத்தை முகமது ரபீக் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு முருகானந்தம், முகமது நிசாருதீன் ஆகிய இருவரும் பணத்தை தருவதாக கூறி தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த முகமது ரபீக் பணத்தை கொடுத்து ஆக வேண்டும் என்று கண்டிப்பாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து முருகானந்தம் மற்றும் முகமது நிசாருதீன் உள்ளிட்டோர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து முகமது ரபீக் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் முருகானந்தம், முகமது நிசாருதீன் மற்றும் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.