விவசாய பொருட்களுக்கு உரிய விலை வழங்காவிட்டால் சென்னையில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்…
ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி..
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி -கொள்ளிடம் ஆறுகளில் 30 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் 10 கிமீ சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. எனவே திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கொள்ளிடம் – காவிரி ஆறுகளில் மணல் எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்ககூடாது. புதிய மிரா திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொழிற்சாலையோ, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவைகள் எடுக்கப்படாமல் இருக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உறுதி செய்ய வேண்டும். நிலம் ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கர்நாடகத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். தமிழகத்திற்கு குறுவைக்கும் – சம்பா சாகுபடிக்கும் கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை பெற்று தராமல் இரட்டை வேடம் போடுகின்ற மோடி அரசை கண்டித்தும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கடலை குவிண்டாலுக்கு ரூ.6,000 மும், பருத்தி குவிண்டாலுக்கு 12,000, சின்ன வெங்காயம் 50 கிலோ மூட்டைக்கு ரூ.2,500 என்று லாபகரமான விலை அறிவிக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 21 ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.