தமிழகத்தில் உள்ள சில நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாகவும், சட்டத்துக்கு புறம்பாக கள்ள சந்தையில் தங்கம் மற்றும் பணப்பரிவர்த்தனை நடப்பதாகவும் அமலாக்கத் துறையினருக்கு புகார்கள் சென்றன. அந்த புகார்களின் அடிப்படையில் சென்னையில் 6 நகை கடைகளில் அமலாக்கத் துறையினர் 2 தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர். அதேபோல, திருச்சியில் உள்ள 4 நகைக் கடைகளிலும், அதன் உரிமையாளர்கள் இல்லங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. நேற்று முன்தினம் ( 20.11.2023 ) இரவு தொடங்கிய இந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சோதனையின்போது சென்னை நகைக்கடைகளில் இருந்து திருச்சியில் உள்ள இந்த நகைக் கடைகளுக்கு தங்க கட்டிகளை அனுப்பி பட்டறைகளுக்கு கொடுத்து நகைகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதன்மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள், ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்கக் கட்டிகளை வாங்கி அதை நகைகளாக மாற்றி விற்பனை செய்த வகையில் சங்கேத மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் கட்டு கட்டாக சிக்கி உள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட தங்கத்துக்கும், இருப்பில் உள்ள மற்றும் விற்பனை செய்யப்பட்ட தங்கத்துக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.