திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மகன் கோபி. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலிற்க்கு சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், கமலவேணி, ஈஸ்வரன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் நான்கு போிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை, பழிக்கு பழியாக நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Prev Post