விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி, மலைக்கோட்டை கோவிலில், 150 கிலோ எடையில் மெகா கொழுக்கட்டை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். மலைக்கோட்டை கோவில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையாரும் எழுந்தருளி உள்ளனர். ஆண்டுதோறும் இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா, 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
வரும் 18 ம் தேதி, விநாயர் சதுர்த்தி விழா வழிபாடு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மலைக்கோட்டை கோவிலில், பச்சரிசி மாவு உருண்டை வெல்லம், பாசிப்பருப்பு, தேங்காய், நெய் கலந்து 150 கிலோ எடையில் மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்படும். அதற்கான பணிகள் துவங்கி உள்ளது. 150 கிலோ எடையிலான கொழுக்கட்டையில், 75 கிலோ கொழுக்கட்டை துாளியில் கட்டி, மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். இந்த கொழுக்கட்டை, வரும் 18 ம் தேதி, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் சுவாமிகளுக்கு, தலா 75 கிலோ வீதம் படையல் செய்து வழிபாடு நடத்தப்படும். விநாயகருக்கு படையலிட்ட பின், நெய்வேத்தியம் செய்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.