திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த வியாபார மளிகை கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருபவர் மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 56). இவர், மளிகை கடையில் வசூலான ரூ.37.50 லட்சத்தை ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ( 12.09.2023) ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், தலைமை தபால் நிலையம் அருகில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ரவுடி கும்பல் என்பதும், அவர்களுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து முத்தரசநல்லூரைச் சேர்ந்த இளையராஜா மனைவி சூரியா (29) , வரகனேரி சந்தானபுரத்தைச் சேர்ந்த சர்தார் மகன் அன்சாரி (30), காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டையைச் சேர்ந்த ச.வினோத்குமார் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.