விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும், புதிய மின்சார சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது, விவசாய விலை பொருட்களை விற்க கிராமங்கள் தோறும் சந்தைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் விவசாயிகள் இன்று(16-12-2024) ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல, 11 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் திருச்சி ஜங்ஷனில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது விவசாயிகள் வர மறுத்தனர். இதனால், போலீசார் விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். ரயில் மறியல் செய்ய முயன்றதாக மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.