திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஜெயில்பேட்டை பகுதியில் ஒரு டீக்கடை அருகில் பெண் உள்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பேரில், புகையிலை பொருட்களை விற்க முயன்றதாக ஜெயில் பேட்டையை சேர்ந்த சகாயராஜ், சந்திரமோகன் மனைவி ரேவதி, உறையூரை சேர்ந்த மாரிமுத்து, வரகனேரியை சேர்ந்த பதேஷ்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, உறையூர் பகுதியில் கஞ்சா விற்றதாக சதீஷ் என்ற வாலிபரை இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், தலைமைக்காவலர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது குட்ஷெட் ரோடு கருமாரியம்மன் கோவில் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சையது முஸ்தபா சிக்கினார். மற்ற 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவரிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பி ஓடிய பிள்ளை மாநகரைச் சேர்ந்த அஜித் , அல்லாபிச்சை ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.