Rock Fort Times
Online News

3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு-மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி…!

தற்போதைய திமுக அரசில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.  இவர் கடந்த 2016- 2011 ம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக  2011 ல் அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்குப்பதிவு செய்தது. இதனை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனால், பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. அதற்கான நகல் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட உத்தரவையும் திரும்ப பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க பொன்முடியை அமைச்சராக நாளைக்குள் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு .க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்