Rock Fort Times
Online News

கோவையில் வாகன சோதனையின்போது துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கைது- கூட்டாளியும் சிக்கினார்…!

கோவை செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹெவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற செவிட்டு சஞ்சய், கோவை தீத்திபாளையம் அருள் நகரைச் சேர்ந்த ஜலாலுதீன், கோவை இடையர்பாளையம் பி.என்.டி.காலனியைசேர்ந்த கிட்டான் என்ற சரவணக்குமார் என்பதும், அவர்கள் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களில், சஞ்சய் குமாரை போலீசார் சோதனை செய்த போது ஒரு கை துப்பாக்கி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த ஆண்டு சஞ்சய் ராஜு, பசுபதிபாண்டியன் என்பவரை ஆவாரம்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், சஞ்சய் ராஜு தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரிய வந்தது. இந்த கும்பலுக்கு இடையூறாக பொன் குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச் சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளியான செல்வபுரம் வடக்கு ஹவுஸ்சிங் யூனிட்டை சேர்ந்த சல்பல்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பின்னர் அவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்