கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்களது திறமையை வெளிப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டன. அந்தவகையில் “”ராக்கெட் சயின்ன்ஸ்” என்ற தலைப்பிலான இணைய வழி பயிற்சி திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. பிரமோஸ் ஏவுகணையின் திட்ட இயக்குநர் பத்மஸ்ரீ, பத்மபூஷன், விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இவை தொடர்பாக மொத்தம் 15 வகுப்புகள் நடத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் சான்றுகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்ப்புகளுக்கு, 500 பேரில் 220 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 முதல் 7.30 மணி வரை இணைய வழியில் வகுப்புகளும், கேள்வி பதில் பயிற்சிகளும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வருகைப்பதிவு, வினாடி-வினா, குறுகிய வினாடி- வினா உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 130 மாணவ, மாணவியர் 13 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்றாம் கட்ட பயிற்சிக்குப் பின்னர் இறுதிச்சுற்றில் 75 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் திருச்சி மாவட்டம் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கோபிநாத், பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு மாவட்டக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற ராக்கெட் சயின்ஸ் மாதிரி வடிவமைப்பு கண்காட்சியில் இருவரும் முறையே 4, 5 ஆம் இடங்களை பிடித்தனர். இதில் தேர்வான அனைவரும் ரஷியா மாஸ்கோ நகரில் உள்ள யூரிகாகரின் விண்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்படுகின்றனர். முன்னதாக இது தொடர்பாக சென்னையில் இன்று ( 28.09.2023 ) நடைபெறும் விழாவில் இப்பயணக் குழுவினர் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து நாளை அனைவரும் ரஷியா புறப்படுகின்றனர். இரு மாணவர்களுடன் பள்ளி ஆசிரியை கவிதா செல்கிறார். இதனிடையே மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமாா் ஐ.ஏ.எஸ்சை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உடனிருந்தார்.

Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.